தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அமைச்சர் எ.வ.வேலு நினைவு பரிசுகளை வழங்கினர்.
பின்னர் நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி திருவாரூர், காரைக்குடி, பொம்மிடி உள்ளிட்ட எட்டு புதுப்பிக்கப்பட்ட அம்ரித் ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதேபோல் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதையையும் பிரதமர் மோடி நாட்டிற்காக அர்ப்பணித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் ஆயிரத்து 300 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பின் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 9 மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் பட்டியலிட்டார்.
















