நாங்குநேரி அருகே பொதுமக்கள் மீது மர்மநபர்கள் அரிவாளால் தாக்கியதில் வடமாநில தொழிலாளி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெரும்பத்து இந்திரா காலனி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர், திடீரென அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.
குண்டு வெடித்து சிதறியதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓடினர். அப்போது, அந்த நபர்கள் பொதுமக்களை விரட்டிச் சென்று அரிவாளால் தாக்கியுள்ளனர்.
இந்த கொடூர தாக்குதலில் வடமாநில தொழிலாளர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இதே கும்பல் களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திற்குள் புகுந்து பொதுமக்களை தாக்கியதில் 2 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே, மர்ம கும்பலில் அட்டூழியத்தைக் கண்டித்து பெரும்பத்து பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெரும்பத்து பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















