மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கன்றுக்குட்டியின் தலையை வீசிய வழக்கில், சிறப்பு காவல் படை போலீசார் 6 பேர் மீதான மாநில மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது.
மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கடந்த 2011ம் ஆண்டு, கன்றுக்குட்டியின் தலை வீசப்பட்டது. இதுகுறித்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், புகார்தாரர்களான 4 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும், காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை ரத்து செய்யக்கோரி காவலர்கள் 6 பேரும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.கலைமதி அமர்வு புகார்தாரர்களுக்கு நடந்த மனித உரிமை மீறலுக்கு மனுதாரர்களை சிக்க வைக்க போதுமான ஆதாரம் இல்லை என்றும், இதனால் மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இருப்பினும் நீதிமன்ற விசாரணையில் புகார்தாரர்கள் காவல் சித்ரவதைகளுக்கு ஆளானது உறுதியானால், அவர்களுக்கு பொருத்தமான இழப்பீடு வழங்கலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
















