மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ட்ரோன் தாக்குதல்களைச் சமாளிக்க, உக்ரைன் தயாரித்துள்ள குறைந்த விலை ‘இடைமறிப்பு ஏவுகணை’ தொழில்நுட்பத்தைப் பெற அமெரிக்கா மற்றும் ஓரிரு வளைகுட நாடுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.
ஈரானின் ‘ஷாஹெட்’ வகை தற்கொலை ட்ரோன்களை ரஷ்யா பல்லாயிரக்கணக்கில் உக்ரைன் மீது ஏவி வருகிறது. இவற்றை வீழ்த்த ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தற்போது அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளையே நம்பியுள்ளன.
இருப்பினும், ஒரு ஷாஹெட் ட்ரோனின் விலை 25 லட்சம் ரூபாய் மட்டுமே. ஆனால், அதைச் சுடப் பயன்படும் ஒரு பேட்ரியாட் ஏவுகணையின் விலை பல மில்லியன் டாலர்களாகும். இந்த நிதிச் சுமையைக் குறைக்க, உக்ரைன் மிகக் குறைந்த செலவில் ட்ரோன்களைத் துல்லியமாக அழிக்கும் புதிய வகை இடைமறிப்பு ஏவுகணைகளை அதிக அளவில் உற்பத்தி செய்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்துப் பேசியதாகவும், மேலும், அமெரிக்காவின் பென்டகனும் இந்தத் தொழில்நுட்பத்தை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறினார்.
இந்த உதவி உக்ரைனின் சொந்தப் பாதுகாப்பைப் பாதிக்காத பட்சத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும், இந்த ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ராஜதந்திர பலத்தைத் தர வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
















