மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு மத்தியில் மேற்காசிய நாடுகளில் நிலவும் மோசமான நிலைமை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார்.
அப்போது, வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசித்து வருவதையும், ஈரானில் மட்டும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவையில் பெரும் பகுதியை பூர்த்தி செய்யும் இப்பிராந்தியத்தில் நிலவும் உறுதியற்ற தன்மை இந்திய நலன்களை பாதிக்காத வகையில் தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்த ஜெய்சங்கர், இந்தியாவுக்கு எரிசக்தி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதில் இந்திய அரசு உறுதியாக உள்ளதாகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
















