அறந்தாங்கியில், திருமணத்திற்காக வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 137 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல் ஹமீது தெருவில் வசிப்பவர் ஹாஜா நஜிமுதீன். இவரது மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அதற்காகப் பெற்றோர்கள் ஆசை ஆசையாகச் சிறுகச் சிறுகச் சேர்த்த 137 சவரன் தங்க நகைகளை பீரோவில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். பெரிய பள்ளி வாசலுக்கும், சிறப்பு தொழுகை இடத்திற்கும் குடும்பத்தினர் சென்றதாக கூறப்படுகிறது.
வீட்டில் யாரும் இல்லாத இந்தச் சந்தர்ப்பத்தைச் பயன்படுத்தி மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 137 சவரன் நகைகளையும் கொள்ளையடித்துக் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
















