கரூரில் வாக்காளர்களை அடைக்க 100 கூடாரங்கள் அமைக்கப்பட்டதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து திமுக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கட்சிகள் அனைத்தும் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர்.
அதில், திமுகவினர் சுமார் 100 இடங்களில் மனிதப் பட்டிகள் அமைத்துள்ளதாகவும், அங்கு பொதுமக்களை திரட்டி வைத்து அவர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டை மறுத்து, திமுக சார்பில் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர்.
















