அமெரிக்கா – ஈரான் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக டிரம்ப் அறிவித்த உடனேயே, பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என ஈரான் மறுத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர், நான்கு வாரங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.
இது சர்வதேச அளவில் பொருளாதார அளவிலும், வர்த்தக போக்குவரத்திலும் மந்த நிலையை உருவாக்கியது மட்டுமின்றி ஒருசில நாடுகளை கடுமையாக பாதித்தது.
இத்தகைய சூழலில் ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறிய டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
இந்த செய்தி, போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த நாடுகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது.
ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே டிரம்ப்பின் அறிவிப்புகள் போலி எனக்கூறிய ஈரான், தங்களது பாதுகாப்பு மற்றும் இறையான்மைக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை டிரம்ப் நினைத்தது நடக்காது என்று தெரிவித்தது.
ஈரானின் எரிசக்தி மையங்களை தாக்கினால் வளைகுடாவில் அமெரிக்க ஆதரவு நாடுகளின் மின்சாரம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்குவோம் என ஈரான் எச்சரித்ததே டிரம்ப் பின்வாங்கக் காரணம் என விமர்சித்த ஈரான்,
கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க முடியாமலே டிரம்ப் ஐந்து நாள் அவகாசம் வழங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் வெவ்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் அமலில் உள்ளதா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
















