சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மே 12ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியிருந்தார்.
பொன்முடிக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன் தொடர்சியாக மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடி மார்ச் 24ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சவுந்திர பாண்டியன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இன்று ஒருநாள் அஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு பொன்முடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மே 12ஆம் தேதி பொன்முடி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, அன்றைய தினமே வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
















