பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் நாளைக்குள் அன்புமணி பதிலளிக்க வேண்டும் என உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு வரும் வரை பாமகவின் சின்னத்தை முடக்கி வைக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடி கொள்ளலாம் எனக்கூறி ராமதாஸின் மனுவை தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 3 நாட்களுக்குள் மனுவை விசாரித்து உரிமையியல் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, மாம்பழம் சின்னம் விவகாரம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நாளைக்குள் அன்புமணி தரப்பு பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
















