நாங்குநேரி அருகே விவசாயி படுகொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரி 9வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள வடக்கு நெல்லையப்பபுரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற விவசாயி கடந்த 17ஆம் தேதி மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், ஒரு வாரமாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறி வந்தனர்.
இதனிடையே, இரு தினங்களுக்கு முன்பு தந்தை இறந்த சோகத்தில் ஆறுமுகத்தின் மகள் பேபி கனி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது, தனது உறவினர் தான் தந்தையின் கொலைக்கு காரணம் என்றும், குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும் எனவும் பேபி கனி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
இதனடிப்படையில், நெல்லையப்புரத்தைச் சேர்ந்த சூசைமுத்து, செல்வகுமார், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சூழலில் 9வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள், உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 3 பேரும் உண்மையான குற்றவாளிகள் என்பதை காவல்துறை நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
















