கோவையில் சாலையில் அடிபட்ட மயிலை காப்பாற்றாமல் சிலர் அதன் தோகையை பிடுங்கிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கோவை தீத்தி பாளையத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றுடன் மோதியதில் மயில் ஒன்று காயமடைந்து சாலையோரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. தேசியப் பறவையான மயில் இவ்வாறு துடித்துக் கொண்டிருந்த நிலையிலும், சிலர் அதை காப்பாற்றுவதற்குப் பதிலாக அதன் அழகிய தோகைகளை பிடுங்கியதாக கூறப்படுகிறது. மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்ட இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அங்கு வழியாக சென்ற இருவர் இந்த கொடூரத்தை கண்டு உடனடியாக காயமடைந்த மயிலை பாதுகாப்பாக மீட்டு அருகிலுள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தற்போது மயிலுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு போராடும் உயிரினத்தை கூட இரக்கமின்றி கொடூரமாக நடத்துபவர்கள் ஒருபுறம் இருக்க, மனிதாபிமானத்துடன் அதை காப்பாற்ற முன்வரும் நல்லுள்ளங்களும் இருப்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.
















