கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக வேட்பாளரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசனை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தனர்.
கடந்த சில நாட்களாக தொகுதி முழுவதும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வந்த நிலையில், அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை அறிந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலினும் வானதி சீனிவாசனை தொலைபேசியில் அழைத்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில், தற்போது மருத்துவமனையில் அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில தினங்கள் ஓய்வு எடுத்தபின் அவர் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம் எனவும் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















