சாதி, மதம், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் நலனுக்காக பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும் என கலைமாமணி பிரகாஷ் எம்.ஸ்வாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கத்தில் கலைமாமணி பிரகாஷ் எம்.ஸ்வாமியின் 50 ஆண்டுகால பத்திரிகை, சமூகப் பணிகளைப் பாராட்டும் 3வது மேடைத் திருவிழா மற்றும் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில், முன்னாள் அமைச்சர் பத்மஸ்ரீ டாக்டர் எச்.வி. ஹண்டே, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் பி. வெங்கடரமணன், லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கலைமாமணி பிரகாஷ் எம்.ஸ்வாமி, பத்திரிகைத் துறையில் தன்னை வழிநடத்திய குருமார்களையும், நண்பர்களையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
சாதி, மதம், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் நலனையே முதன்மையானது என பத்திரிகையாளர்கள் கருத வேண்டும் என வலியுறுத்தினார். மக்களுக்கு என்ன தேவை என்பதை வழங்க வேண்டுமே தவிர, நமக்கு வேண்டிய கருத்துகளை மக்கள் மீது திணிக்கக் கூடாது என அறிவுறுத்தினார். மேலும், உண்மை உறுதிப்படுத்தப்படாத செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எந்த தகவலாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறைகளிடம் உறுதி செய்த பிறகே வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் வெங்கடரமணன், கலைமாமணி பிரகாஷ் எம். ஸ்வாமியின் ஐம்பது ஆண்டுகால பத்திரிகைப் பயணத்தை வெகுவாகப் பாராட்டினார். “விழுந்த மனிதர்கள்” நூல் தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழலுக்கு மிகவும் பொருத்தமான படைப்பாக அமைந்துள்ளதாக கூறிய அமைச்சர், நேர்மை மற்றும் உண்மை, ஒழுக்கத்தை இழந்தவர்கள் இறுதியில் வீழ்ச்சியைச் சந்திப்பார்கள் என்பதே நூலின் மையக் கருத்தாக உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்கும் காலம் வரவுள்ளதாகவும், பழைய அரசியல் நடைமுறைகளை உடைத்து புதிய அணுகுமுறைகளை கொண்டுவர வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அமைச்சர் வெங்கட்ரமணன் குறிப்பிட்டார்.
















