சென்னை மாநகரில் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை நவீனமயமாக்க 2 ஆயிரத்து 190 கோடி ரூபாய் கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள தகவலில், சென்னையில் வசிக்கும் 4.5 மில்லியன் மக்களின் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பை நவீனமயமாக்க 2 ஆயிரத்து 190 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் அடல் புத்துயிர்ப்பு மற்றும் நகர்ப்புற மாற்றம் 2.0 திட்டத்துடன் இணைந்து திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாகவும், நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் கட்டமைப்பை, நகரத்தின் மக்கள் தொகை மற்றும் நகர்ப்புற வளர்ச்சியுடன் சமமாக விரிவடைய செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நகரின் மீள்திறன், பொது சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நீண்டகால மேலாண்மையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
170 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் குழாய்களை கட்டமைக்கப்படவுள்ளதாகவும், ஏழு நீர் பம்பிங் நிலையங்கள் மற்றும் 38 கழிவுநீர் பம்பிங் நிலையங்கள் மேம்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னையின் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் கட்டமைப்பில் புதிய குழாய்கள், மேம்படுத்தப்பட்ட பம்பிங் நிலையங்கள் மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டு அமைப்புகளை விரிவாக்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















