உலகின் மிகச்சிறந்த SUPERSONIC CRUISE MISSILE என்றழைக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணையின் அடுத்த VERSION-ஐ இந்தியா உருவாக்கி வருகிறது. அதன் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.
இந்திய ராணுவத்துக்கு வலிமை சேர்க்கும் முக்கிய தூணாக விளங்குவது பிரம்மோஸ் ஏவுகணை. இந்திய – ரஷ்ய கூட்டுத்தயாரிப்பான பிரம்மோஸ் தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. ‘பிரம்மோஸ்-NG’ அதாவது BrahMos-Next Generation என்ற பெயரில் புதுவடிவம் பெறுகிறது. இது இந்திய பாதுகாப்புத்துறையில் ஒரு GAME CHANGER-ஆக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
தற்போதைய பிரம்மோஸ் ஏவுகணைக்கும் பிரம்மோஸ்-NG-க்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடு அதன் எடை மற்றும் அளவுதான். பிரம்மோஸ் ஏவுகணை சுமார் 3 டன் எடை கொண்டது. ஆனால், பிரம்மோஸ்-NG சுமார் 1.3 டன் எடை மட்டுமே கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏவுகணையின் எடை பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் எதிரிகளை நோக்கி சீறிப்பாயும் வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. பழைய 3 டன் பிரம்மோஸ் ஏவுகணையை, சுகோய்-30 எம்.கே.ஐ. போன்ற கனரக போர் விமானங்களில் மட்டுமே பொருத்த முடியும். அதுவும் ஒரு விமானத்தில் அதிகபட்சம் ஒரு ஏவுகணையை மட்டுமே சுமந்து செல்ல முடியும். ஆனால், பிரம்மோஸ்-NG சிறியதாக இருப்பதால், ஒரு சுகோய் போர் விமானத்தில் ஒரே நேரத்தில்
ஒன்றுக்கும் மேற்பட்ட பிரம்மோஸ்-NG ஏவுகணைகளைச் சுமந்து செல்ல முடியும். மேலும், Tejas Mk1A, HAL Tejas Mk2 போன்ற விமானங்களிலும் பிரம்மோஸ்-NG ஏவுகணையை எடுத்துச் செல்லமுடியும். இதன்மூலம் இந்தியாவின் வான்வழிப் பாதுகாப்பு அதிகரிக்கும்.
முந்தைய VERSION-ஐவிட கூடுதல் புத்திசாலிதனத்துடன் பிரம்மோஸ்-NG ஏவுகணை உருவாக்கப்படுகிறது. இது எதிரிகளின் ரேடாரில் எளிதில் சிக்காது. வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஏமாற்றிவிடும். முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட AESA Radar பொருத்தப்பட்டிருப்பதால் நகரும் இலக்குகளைக்கூட மிகத்துல்லியமாக தாக்கும் திறன் பிரம்மோஸ்-NG-க்கு உண்டு. கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் பிரம்மோஸ்-NG-யை ஏவமுடியும். முந்தைய பெரிய பிரம்மோஸ் ஏவுகணைகளுக்குப் பிரத்யேகமான பெரிய லாஞ்சர்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த NG ஏவுகணையை எந்தவொரு போர் தளவாடத்திலும் எளிதில் பொருத்த முடியும்.
சோதனைக்குப் பிறகு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தொழிற்சாலையில் பிரம்மோஸ்-NG-ன் தயாரிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் மாபெரும் வெற்றியாக இது கருதப்படுகிறது.
பிரம்மோஸ்-NG என்பது குறைந்த எடையிலும் அளவிலும் தயாரிக்கப்படும் ஒரு ஆயுதம் மட்டுமல்ல. அதிக இலக்குகளை, அதிவேகத்தில் துல்லியமாகத் தாக்கும் இந்த ஏவுகணை, இந்திய முப்படைகளின் வலிமையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது. பாதுகாப்பைத் தாண்டி, உலகளாவிய ஆயுதச் சந்தையில் இந்தியாவின் வர்த்தக எல்லையை விரிவுப்படுத்துவதிலும் பிரம்மோஸ்-NG ஒரு முக்கிய கருவியாகச் செயல்படப் போகிறது என்பதில் எவ்வித ஐயமில்லை.
















