மதுரையில் போலீசார் தாக்கியதில் பூசாரி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில், மருத்துவமனைக்கு வந்து காவல் ஆய்வாளர் பேரம் பேசியதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்….
மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த பூசாரி பரமசிவம் என்பவருக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே கடந்த ஜூலை 18-ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பான விசாரணையின் போது பரமசிவத்தை சிந்தாமணி காவல்நிலையத்தில் ஆய்வாளர் பாஸ்கரன், எஸ்.ஐ ஜெயக்குமார், காவலர்கள் ஆனந்த், அப்துல் முகமது உள்ளிட்டோர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீடு திரும்பிய அவர், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் மரணத்திற்கு முன்பு பூசாரி பரமசிவம் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், எதிர்தரப்பிடம் பணம் வாங்கிக் கொண்டு காவல்நிலையத்தில் தன்னை தாக்கியதாகவும் தனக்கு ஏதாவது நேர்ந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த காவல்துறை, பூசாரி பரமசிவத்தை போலீசார் தாக்கவில்லை எனவும் வீட்டில் தற்செயலாக கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளது.
இதையடுத்து அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதி நேரில் சென்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்…
இதுதொடர்பாக பேட்டியளித்த பரமசிவத்தின் மனைவி அய்யம்மாள். காவல்துறையினர் தனது கணவரை அடித்து கொன்றுவிட்டதாகவும், மருத்துவமனைக்கு வந்து தன்னிடம் பேரம் பேசியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேட்டியளித்த பூசாரியின் மகன் பிரபு, தனது தந்தையை போலீசார் தாக்கியதை தான் பார்த்ததாகவும் தந்தையின் மரணத்திற்கு நீதி வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.செல்வக்குமார், விசாரணை என்ற பெயரில் ஏழை மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதை போலீசார் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்….
















