தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்குவதை உறுதி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உள்துறை அமைச்சகத்தின் புதிய அறிவிப்பாணையில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகிய இரண்டில், வந்தே மாதரம் பாடலை முதலிலும், தொடர்ந்து தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநில பாடல் இறுதியில்தான் பாட வேண்டும் என அறிவிப்பாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை எனக் கூறி, மத்திய அரசின் புதிய அறிவிப்பாணையை சுட்டிக்காட்டினர்.
இதன் அடிப்படையில்தான், சுதந்திர தினத்தன்றுகூட சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தொடர்ந்து வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதமும் பாடப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
















