தமிழ்நாட்டில் முதற்கட்டமாக சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னையில் ஒலிம்பிக் இல்லம் அமைக்கப்படும் என்றும், மகளிர் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ‘சிங்கப்பெண்’ விளையாட்டுத் திருவிழா நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
சென்னையில் பாரா ஒலிம்பிக் சிறப்பு விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்றும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கத்தின் உள்கட்டமைப்பு மறுசீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மாவட்டம் தோறும் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும் என்றும், விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான இடஒதுக்கீடு உயர்த்தப்படும் என்றும் கூறினார்.
ஆண்டுதோறும் 42 கோடி ரூபாய் செலவில் கபடி உள்ளிட்ட கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
















