65 பேர் கொண்ட மறுசீரமைக்கப்பட்ட தேசியக் குழுவை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ளார். இதில் முந்தைய நிர்வாகக் கட்டமைப்பில் இருந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானோர் மாற்றப்பட்டு, 51 புதிய நிர்வாகிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
அடுத்து வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகி வரும் பாஜக, தனது தேசிய அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் சமூகப் பிரிவுகள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் தேசிய அமைப்பில் புதிய நியமனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
புதிய தேசியத் துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவர்களின் பெயர்களை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ளார்.
65 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில் 51 புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ள அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் முந்தைய நிர்வாகத்தில் இருந்தவர்களில் 14 தலைவர்களை மட்டுமே பொறுப்புகளில் தக்க வைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்திலிருந்து எட்டு பேரும், உத்தரகண்ட்டில் இருந்து நான்கு பேரும், குஜராத்தில் இருந்து நான்கு பேரும் மற்றும் பஞ்சாப்பில் இரண்டு பேரும் என முக்கிய மாநிலங்களிலிருந்து 18 முக்கியத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தன் மூலம், வரவிருக்கும் 2027 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை இந்த மறுசீரமைப்பு மூலம் நிதின் நபின் அமைத்துள்ளார்.
தேசியத் துணைத் தலைவர்களாக தாரிக் மன்சூர் மற்றும் ரேகா வர்மாவும் , தேசியப் பொதுச் செயலாளர்களாக ஸ்மிருதி இரானி மற்றும் ஹரிஷ் துவிவேதியும் தேசியச் செயலாளர்களாக டாக்டர். போலா சிங் மற்றும் சங்கீதா யாதவ்வும் ஓபிசி (OBC)அணி தலைவராக அமர்பால் மௌர்யாவும் சிறுபான்மையினர் அணி தலைவராக யும் குன்வர் பாசித் அலியும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
குறிப்பாக புதிய நிர்வாகிகளில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர். தேசியத் துணைத் தலைவராக பேராசிரியர் தாரிக் மன்சூரும் சிறுபான்மையினர் அணியின் தலைவராக குன்வர் பாசித் அலியும் நியமிக்கப்பட்டுள்ள்ளனர்.
மேலும் புதிய மத்தியக் கட்டமைப்பில் உத்தரப் பிரதேசத்திற்கு அதிகபட்ச பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்டில், முன்னாள் முதல்வர் தீரத் சிங் ராவத் தேசியத் துணைத் தலைவராகவும், மகேந்திர பாண்டே தேசிய அலுவலகச் செயலாளராகவும், அனில் பலூனி ஊடகப் பொறுப்பாளராகவும், அலோக் பட் சமூக ஊடக இணைப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாபைப் பொறுத்தவரை, முன்னாள் நிதியமைச்சர் மன்பிரீத் சிங் பாதல் தேசியத் துணைத் தலைவராகவும், தருண் சுக் தேசிய அலுவலகப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் இருந்து வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி துணைத் தலைவராகவும், ஜெகதீஷ் ஈஸ்வர்பாய் படேல் மற்றும் ரோஹன் குப்தா ஆகியோர் தேசியச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைப்பு ரீதியான நிர்வாகத்தை வளர்க்க ராம் மாதவ் மீண்டும் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்குப் பதிலாக இளைஞர் அணியின் புதிய தலைவராக ஹேமங் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பி.எல். சந்தோஷ் தேசியப் பொதுச் செயலாளராகத் தொடர்வார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
பாஜக தேசியப் பொருளாளராக பியூஷ் கோயலும், 6 தேசியச் செயலாளர்களில் கேரளாவைச் சேர்ந்த கே. சுரேந்திரன் மற்றும் அனில் ஆண்டனி ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். பாஜகவின் டிஜிட்டல் பிரச்சார உத்தியை மேம்படுத்த, சத்தீஸ்கரைச் சேர்ந்த தீபக் மஸ்கே தேசிய சமூக ஊடக ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
டீம் நபின்’ என்று கூறப்படும் இந்த நிர்வாகக் குழு உறுப்பினர்களிடையே சாதி, மாநிலம் மற்றும் பாலினம் சார்ந்த பிரதிநிதித்துவத்தைச் சம அளவில் உறுதி செய்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
4 பழங்குடியின மற்றும் சில பட்டியல் இன நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ள இந்தப் புதிய தேசிய நியமனங்களில் 1 சீக்கியர், 2 கிறிஸ்தவர்கள், 2 முஸ்லிம்கள், 1 சமணர் மற்றும் 1 பார்சி என மொத்தம் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த 6 பேர் இடம் பெற்றுள்ளனர். வட இந்தியாவில் உள்ள பாரம்பரிய பிராமண ஆதரவு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கையாக ஹரிஷ் திவேதி தேசியப் பொதுச் செயலாளராக உயர்த்தப்பட்டுள்ளார்.
குறிப்பாக 40 வயதுக்குட்பட்ட 6 பேர், 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 15 பேர் மற்றும் 50 முதல் 59 வயதுக்குட்பட்ட 21 பேர் என இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு இடையிலான சமநிலையையும் இந்த நியமனங்கள் உறுதி செய்கின்றன. தேசிய நிர்வாகிகள் பட்டியலில் மொத்தம் 12 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள 13 பேரில் 6 பேர் பெண்கள். ராஜஸ்தானைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த டி. புரந்தேஸ்வரி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேகா வர்மா, குஜராத்தைச் சேர்ந்த வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாரதி பிரவீண் பவார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மதுச்சந்திரா கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எட்டு தேசியப் பொதுச் செயலாளர்களில் ஸ்மிருதி இரானி மட்டுமே பெண். 16 தேசியச் செயலாளர்களில் மூன்று பேர் பெண்கள். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ரூப் குமாரி செளத்ரிக்கு மகளிர் அணியின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் நால்வரில் ப்ரீத்தி காந்தி மட்டுமே பெண் என்பது குறிப்பிடத் தக்கது.
குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சொல்லப்போனால் அமைப்புக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தனிநபர் ஆதிக்கத்திற்கு குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை நிதின் நபின் அமைத்துள்ள இந்த நியமனங்கள் எடுத்துக் காட்டுகிறது.
மூத்த தலைவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டு அடிமட்டத்திலிருந்து புதிய கட்டமைப்பை ஏற்படுத்தி எதிர்காலத்தில் வரவும் தேர்தல்களைச் சந்திக்க பாஜக தயாராவதையே இந்த மறு சீரமைப்பு காட்டுகிறது.
















