உயர்தர நீண்ட தூர ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் இந்திய ரயில்வே 50 புதிய ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தவுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 12 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வந்தே பாரத் ரயில்களின் அறிமுகம் மக்களின் நீண்ட தூரப் பயணங்களை மேம்படுத்தியுள்ளன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன ரயில்கள், இந்தியாவின் ரயில் பொதுப்போக்குவரத்து அமைப்பையே முழுமையாக மாற்றியமைத்துள்ளன.
விமானங்களுக்கு இணையான சொகுசு வசதிகள், அதிவேகப் பயணம், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் என வந்தே பாரத் ரயில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த ஜனவரியில் ஹவுரா மற்றும் காமாக்யா இடையே இந்தியாவின் முதல் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது. இந்த ரயிலில் 11 ஏசி 3-டயர் பெட்டிகள், நான்கு ஏசி 2-டயர் பெட்டிகள் மற்றும் ஒரு ஏசி முதல் வகுப்புப் பெட்டி ஆகியவை உள்ளன.
இந்நிலையில் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றியபோது, ஐசிஎஃப் பொது மேலாளர் மணீஷ் அகர்வால் 24 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தொகுப்பின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கான பெட்டிக் கட்டமைப்பு, பெட்டிகளுக்கிடையேயான இணைப்புகள் மற்றும் கீழ்ச்சட்டக உபகரணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உற்பத்தி வரைபடங்கள் தயாராக உள்ளதாகவும் அகர்வால் கூறியுள்ளார்.
அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முக்கியமாக பகல் நேர வழித்தடங்களில் இருக்கை வசதி மட்டும் கொண்ட ரயிலாகவே இயக்கப்பட்டு வருகிறது. இரவு நேரப் பயணங்களுக்கு ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 50 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் நாட்டின் உயர்தர ரயில் பயணச் சேவையில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இயக்கப்படும் 16 பெட்டிகள் கொண்ட ஸ்லீப்பர் ரயிலுடன் ஒப்பிடுகையில், வரவிருக்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தொகுப்புகள் 24 பெட்டிகளைக் கொண்டிருக்கும் என்றும், 16 பெட்டிகள் கொண்ட ரயிலை விட 24 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் சுமார் 1.5 மடங்கு அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
பெட்டி கட்டமைப்பு, பெட்டி இணைப்புகள் மற்றும் அடிப்பகுதி உபகரணங்கள் தொடர்பான வடிவமைப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் கூடுதல் ரயில் தொகுப்புகள் கிடைப்பதன் மூலம், கூடுதல் நீண்ட தூர வழித்தடங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவைகளை அறிமுகப்படுத்துவது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
24 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 17 AC 3-tier பெட்டிகள், ஐந்து AC 2-tier பெட்டிகள், ஒரு ஏசி முதல் வகுப்புப் பெட்டி மற்றும் ஒரு pantry car ஆகியவை இடம்பெறலாம் என்று தகவல்கள் தெரிவித்தாலும் அதிகாரப்பூர்வமாக இந்திய ரயில்வே இந்த தகவல்களை உறுதி படுத்தவில்லை.
அடுத்த ஆண்டு இறுதிக்குள், மொத்தம் 50 அதிநவீன ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரித்து முடிக்க புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இதே போல் அடுத்த தலைமுறை அம்ரித் பாரத் 3.0 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி, பொது வகுப்பு (general class) மற்றும் ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளுடன் கூடிய மற்றொரு மலிவு விலை பயணத் தேர்வை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மைல் கல்லாக அதிநவீன ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என்று பாராட்டப்படுகிறது.
















