பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்திய மக்கள் மீது ரேஞ்சர்ஸ் படை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணவீக்கம், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றை கண்டித்து பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய பாகிஸ்தான் அரசு, ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் அத்துமீறல் மற்றும் ராணுவ நடவடிக்கையை கண்டித்து முசாஃபராபாத் மாகாணத்தின் தடியால் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதி முறையில் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தூப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
















