கோவையில் மத்திய அரசின் மானிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட இரண்டு இடங்களில் மத்திய அரசின் மானிய யூரியா மூட்டைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 யூரியா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை கேரளாவைச் சேர்ந்த ஆஷிப் அலி என்பவர் குத்தகைக்கு எடுத்து குடோன் அமைத்து, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மத்திய அரசின் மானிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், இயந்திரம் மூலம் யூரியாவை திரவமாக மாற்றி டேங்கர் லாரிகள் மூலம் கேரளாவில் உள்ள பசை தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, யூரியா உரத்தை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார்,
2 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும், யூரியா கடத்தலில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















