அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி உயர்ந்தாலும், மனிதாபிமானத்துடன் செயல்படுவதே மிகவும் முக்கியம் என தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கண்பார்வை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஒளி விலகல் அறுவை சிகிச்சை மாநாட்டை ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார். இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கண் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அர்லேகர், தற்போது அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதாகக் கூறினார். குறிப்பாக கண் மருத்துவம் மற்றும் சிகிச்சை முறைகளில் தொழில்நுட்ப முன்னேற்றம் வேகமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
அதேநேரம், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் மனிதாபிமானமே அடிப்படையாக இருந்துள்ளதாகக் கூறிய அவர், மருத்துவர், வழக்கறிஞர், நீதிபதி, அரசியல்வாதி என எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், மனிதாபிமானத்துடன் செயல்படுவதே உயர்ந்த பண்பு என்றும் வலியுறுத்தினார்.
















