ஈரான் உடனான போர் காரணமாக, அமெரிக்காவுக்கு ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஏவுகணைகளின் கையிருப்பு குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். . இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் தொடங்கியதுதான் தாமதம். அதற்குள், கச்சா எண்ணெய் விலை விண்ணை தொட்டுவிட்டது. பங்குச்சந்தைகள் பாதாளத்தை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டன. உலகம் முழுவதும் பல ட்ரில்லியன் டாலர் வர்த்தகம் முடங்கிவிட்டது. இவை அனைத்தும் வெறும் 4 நாட்களில் நிகழ்ந்து முடிந்துள்ளன. ஈரான் போர் தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், அதன் பாதிப்பு மேலும் மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போர் குறைந்தது 4 வாரங்களுக்கு நீடிக்கலாம் என்பது ட்ரம்பின் கணிப்பாக உள்ளது. ஆனால், இன்னும் 10 நாட்களுக்கு போர் நீடித்தால், அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்பு பெருமளவில் குறைந்துவிடும் என, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், சிஎன்என் போன்ற முக்கிய செய்தி நிறுவனங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
தரைவழி தாக்குதல்களை நடத்தும் டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகள் மற்றும், SM-3 எனப்படும் இடைமறிப்பு ஏவுகணைகளின் எண்ணிக்கை அமெரிக்காவிடம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்க Thaad, Patriot, Standard Missile போன்ற இடைமறிப்பு ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. ஆனால், உற்பத்தி செய்யப்படும் அளவைவிட, களத்தில் பயன்படுத்தப்படும் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, எதிரிகளின் ஏவுகணைகள், விமானங்கள் மற்றும் ட்ரோன்களை நடு வானிலேயே தடுத்து அழிக்கும் திறன் கொண்ட பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்தபடியே வருகிறது. ஏற்கனவே ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள உக்ரைனுக்கு கணிசமான எண்ணிக்கையில் பேட்ரியாட் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கியுள்ளது. தற்போது ஈரானுக்கு எதிராகவும் அவற்றை பயன்படுத்த வேண்டியுள்ளதால், கையிருப்பு குறைந்தபடியே உள்ளது.
இது குறித்த கருத்து தெரிவித்த Stimson Center அமைப்பை சேர்ந்த Kelly Grieco என்பவர், அமெரிக்கா அதிக வேகத்தில் ஏவுகணைகளை தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.
ஈரானின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள THAAD என்ற ஏவுகணை தடுப்பு அமைப்பை, இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியிருந்தது. ஆனால், அது போதுமான அளவில் இல்லை என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இஸ்ரேலிடம் உள்ள சொந்த ஆயுதங்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் குறைந்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக, ஈரானின் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் Arrow 3 பாதுகாப்பு அமைப்பின் கையிருப்பு குறைந்து வருகிறது.
ஆனால், சிஎன்என், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இந்த அனைத்து தகவல்களுக்கும் சிலர் மறுப்பு தெரிவிக்கின்றனர். பலம் குறைந்த நாடான உக்ரைனே 4 ஆண்டுகளாக ரஷ்யாவை சமாளித்து வருகிறது. இந்த சூழலில், உலகின் வல்லரசு நாடாக அமெரிக்கா ஈரானுக்கு எதிராக 10 நாட்களுக்கு கூட தாக்கு பிடிக்காதா என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
















