மணிப்பூர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக குக்கி சமூகத்தினருக்கும், மெயிட்டி சமூகத்தினருக்கும் இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வன்முறைகள் நடந்து வருகிறது. இதனிடையே பழங்குடியின பெண்கள் மீதான வன்முறை காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. உச்சநீதிமன்ற விசாரணைக்கு மணிப்பூர் மாநில டி.ஜி.பி. ராஜிவ் சிங் நேரில் ஆஜரானார். அப்போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி, மணிப்பூர் விவகாரத்தை மிகவும் கவனமுடன் கையாண்டு வருவதாகவும், இது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார்.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “மணிப்பூர் விவகாரத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஆகவே, மேற்கண்ட விவகாரம் தொடர்பான ஒட்டுமொத்த விசாரணையையும் கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கும்” என்று உத்தரவிட்டனர்.
அதன்படி, காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கீதா மிட்டல், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஷாலினி ஜோஷி, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.