மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, தேர்தல் வியூகங்கள் வகுப்பது குறித்து நாடு முழுவதுமுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கிய இக்கூட்டம் இன்றுடன் நிறைவடைந்தது.
நேற்று மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். முதலில் நடந்த கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களைச் சேர்ந்த 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுடன் அதிக நேரத்தைச் செலவிட்டு நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும். மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை பொது மக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும். மத்திய அரசின் செயல்பாடுகள், சாதனைகள், திட்டங்கள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்கள் மூலம் அதிகளவில் மக்களைச் சென்றடையும் வகையில் பரப்ப வேண்டும். மேலும், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஊழல், வாரிசு அரசியல் குறித்து பொதுமக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
இன்று மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன், டையூ ஆகிய மாநிலங்களின் எம்.பி.க்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பகவத் கராட் மனோஜ் கோட்டாக் அர்ஜூன் ராம் மெக்வால், கைலாஷ் சத்யார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.