உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி, உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகின்ற 25ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது.
இப்போட்டிக்கான அட்டவணை கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆனால் போட்டி அட்டவணை வெளியான சில நாட்களிலேயே பாதுகாப்பு அம்சங்கள் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ஆட்டங்களின் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை எழுந்தது.
இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
போட்டி நடைபெறும் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் அகமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினம் நவராத்திரி விழா தொடங்குவதால் இந்தப் போட்டி நடக்கும் பகுதிக்குப் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அந்த ஆட்டம் ஒரு நாள் முன்னதாக அதாவது அக்டோபர் 14ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், உலக கோப்பைக் கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கிடைக்கும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ம் தேதி விற்கப்படும்.
கிரிக்கெட் இரசிகர்கள் உலக கோப்பை இணையதளத்தில் வரும் 15-ம் தேதி முதல் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.