நாடு சுதந்திரம் அடைந்து விட்டதால், இனி நாட்டிற்காக யாரும் உயிர் தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதேசமயம், நாட்டிற்காக வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு விழாவை அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடும்படி பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், இதையொட்டி, ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வீடுதோறும் தேசியக் கொடியேற்றி கொண்டாடுமாறும், கொடியேற்றும்போது எடுத்த புகைப்படங்களை ஹர் ஹர் திரிங்கா இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்படியும் நாட்டு மக்களை பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. நாடு சுதந்திரம் அடைந்து விட்டதால், இனி நாட்டிற்காக யாரும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், நாட்டுக்காக வாழ்வதை யாராலும் தடுக்க முடியாது.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, கடந்தாண்டு சுதந்திரத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றாத வீடுகளே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடியை ஏற்றும்போது, ஒட்டுமொத்த தேசத்தின் ஒற்றுமையும் வெளிப்படும். சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளில் இந்தியா அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.
2 நாள் பயணமாக குஜராத் சென்றிருக்கும் அமித்ஷா, நேற்று அரபிக் கடலில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சர் கிரீக், ஹராமி நாலா பகுதிகளை பார்வையிட்டு, பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்தார். மேலும், எல்லை பாதுகாப்புப் படைக் கப்பல்கள், படகுகளை நிறுத்தக் கூடிய, மூரிங் பிளேஸ் தளத்துக்கும் அமித்ஷா பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டியவர், எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுடன் கலந்துரையாடினார். இது தவிர, கட்ச்சில் இருந்து பல்வேறு திட்டங்களை காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.