காசி தமிழ் சங்கமம் 2.0 விழாவை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே இருக்கும் உறவானது இந்தியாவின் பாரம்பரியமிக்க இரு கலாச்சாரங்களுக்கிடையே தொன்று தொட்டு வரும் ஒரு பந்தமாகும். நாட்டின் மிகப் பழமையான, கல்வி முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையே உள்ள பழங்காலத் தொடர்பைக் கொண்டாடுவதும், அந்தப் பெருமையை மீட்டெடுத்து உறுதிப்படுத்துவதும், காசி தமிழ் சங்கமத்தின் நோக்கமாகும். தமிழகத்திற்கும், வாரணாசிக்கும் பண்டைய காலத்தில் இருந்தே மிக நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது பல்வேறு சான்றுகள் மூலம் அறியப்படுகிறது
இந்நிலையில் காசி தமிழ் சங்கமத்தின் 2.0 நாளை முதல் 30ஆம் தேதி வரை புனித நகரான காசியில் (வாரணாசி) நடைபெறுகிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி – வாரணாசி தமிழ் சங்கமம் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக கங்கை நதியின் பெயரில் அமைந்த முதல் குழுவில் இடம்பெற்றுள்ள சென்னை மாணவர்கள் அடங்கிய 216 கொண்ட குழுவினர் நேற்று (டிச.15) சென்னையில் இருந்து புறப்பட்டனர். அவர்களை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வழி அனுப்பி வைத்தார்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1400 பேர் (தலா 200 பேர் கொண்ட 7 குழுக்கள்) காசித் தமிழ்ச் சங்கமம் விழாவில் பங்கேற்கிறார்கள். காசியில் தங்கியிருக்கும் போது, அவர்களின் சுற்றுப்பயணத் திட்டத்தின்படி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் செல்வார்கள்.
கலாச்சாரம், ரயில்வே, சுற்றுலா, ஜவுளி, உணவு பதப்படுத்துதல், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள், தகவல் ஒலிபரப்பு, திறன் மேம்பாடு ஆகிய அமைச்சகங்களுடன் இணைந்து இந்தக் காசி தமிழ் சங்கமத்தை கல்வி அமைச்சகம் ஒருங்கிணைத்து நடத்துகிறது.