மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு பயிற்சி மருத்துவர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 16 நாட்களாக நீடித்த உண்ணாவிரதப் போராட்டத்தால் 5க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவர்கள் குழுவுடன் முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக பயிற்சி மருத்துவர்கள் அறிவித்தனர். பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவர்களை தாக்கினால் உடனடி நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மேற்குவங்க அரசு உத்தரவாதம் அளித்ததால் போராட்டத்தைக் முடித்துக் கொண்டதாக பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.