சமூகத்தை பிளவுபடுத்தி கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆவல்பட்டியில் உள்ள வரதராஜ பெருமாள் மற்றும் சென்ராய பெருமாள் கோயில்களுக்கு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை அறங்காவலர்களாக நியமிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடக்கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சாதியை நீடிக்க வைத்து நிரந்தரமாக்கச் செய்யும் வகையிலான இந்த கோரிக்கை, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி மனுதாரரின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், சாதி, ஒரு சமூக தீங்கு என்றும், சாதியில்லா சமுதாயம் தான் நம் அரசியல் சாசனத்தின் இலக்கு என்றும், சாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலிக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது எனத் தெரிவித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, அரசியல் சாசனம் வகுத்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில், சாதி என்ற தேவையில்லாத சுமையை சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அறங்காவலர் பதவிக்கு பக்தி, நம்பிக்கையுடன், ஆன்மிக அறச்சிந்தனைதான் அவசியம் எனக் குறிப்பிட்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி, சாதி அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.