கோவில்பட்டி அருகே தீ விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த விவகாரத்தில் அரசு மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்து மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள தீர்ப்புக்குப் பாதிக்கப்பட்டவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயா என்பவர் 2018ஆம் ஆண்டு வீட்டில் சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தார். இவரைக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரை பரிசோதித்த அரசு மருத்துவர் பிரபாகரன், சாலைப்புதூரில் உள்ள அவரது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளித்துள்ளார்.
ஜெயாவுக்கு முறையாகச் சிகிச்சை அளிக்காததால், அவர் மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது ஜெயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெயாவின் கணவரான ராணுவ வீரர் கருப்பசாமி மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், ராணுவ வீரர் கருப்பசாமிக்குத் தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அரசு மருத்துவர்கள் பிரபாகரன், வெங்கடேசன் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஜெயாவின் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.