பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் தீவிரவாத அமைப்புகளின் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஹிஸ்ப் உத் தஹ்ரிர் எனும் தீவிரவாத அமைப்பின் மீது தமிழக போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
அப்போது அந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜமாத்-உல்-முஸ்லிமீன் என்ற வாட்ஸ்அப் குழுவில் இயங்கி வந்தது தெரியவந்தது. அதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், இலங்கையை சேர்ந்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இடம்பெற்றிருந்தனர்.
அதில் இதுவரை 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்த ராமநாதபுரம், தென்காசி, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 நபர்களை காவல்துறை அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்களை மத்திய புலனாய்வு அமைப்புகள் உடன் இணைந்து தமிழக காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.