அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் – 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 4 பேர் அடங்கிய குழுவை அனுப்ப நாசா திட்டமிட்டது. ஆக்சியம்-4 திட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் இடம்பெற்றுள்ள நிலையில், மோசமான வானிலை மற்றும் ஆக்சிஜன் கசிவு ஆகிய காரணங்களான ஆக்சியம்-4 திட்டம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில், வானிலை 90 சதவீதம் சாதகமாக இருந்ததால், திட்டமிட்டப்படி ஆக்சியம்-4 திட்டம் செயல்படுத்தப்படும் என நாசா அறிவித்தது. அதன்படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளைத் தாண்டி விண்ணில் பாய்ந்தது.
புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் இந்திய நேரப்படி மதியம் 12:01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
நாளை மாலை 4.30 மணிக்கு விண்வெளி நிலையம் சென்றடையும் ராக்கெட்டில் இருந்து வளிமண்டலத்திற்கு அப்பால் டிராகன் விண்கலம் பிரிந்து விடும் என்றும், இதன் பின்னர், விண்வெளியை அடைந்ததும் பூமியைச் சுற்றி வரும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்வார்கள் என்றும், இதில், 60 அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளது. மேலும், விண்வெளியில் பிராணவாயு, நீர் இல்லாத பகுதியில் செடிகள், பயிர்கள் வளர்ச்சி பற்றிய ஆய்வில் சுக்லா ஈடுபட உள்ளார் என நாசா தெரிவித்துள்ளது.