ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள தனது அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை வழங்கி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இஸ்ரேல் உதவியுள்ளது. அமெரிக்காவைத் தவிர்த்து, இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகம் என்பது குறிப்பிடத் தக்கது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
கடந்த 2006ஆம் ஆண்டு தெற்கு லெபனானில் செயல்பட்டுவந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய ஆயிரக் கணக்கான ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் பலர் கொல்லப்பட்டனர். நாட்டின் முக்கிய இலக்குகள் சேதமடைந்தன.
இதனையடுத்து, தங்கள் நாட்டுக்கான அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கத் திட்டமிட்ட இஸ்ரேல் அமெரிக்காவின் நிதியுதவியுடன் அயர்ன் டோமை உருவாக்கியது.
‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு அமைப்பில் ரேடார், கட்டுப்பாட்டு அறை, ஏவுகணைகள் பொருத்தப்பட்ட கவச வாகனம் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
எதிரிகளின் ஏவுகணைகளை கவச வாகனத்தில் உள்ள ரேடார் கண்காணித்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும். கட்டுப்பாட்டு அறையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவின்படி கவச வாகனத்தில் இருந்து ஏவுகணைகள் சீறிப் பாய்ந்து எதிரிகளின் ஏவுகணைகளை நடு வானிலேயே இடைமறித்து அழிக்கும்.
கவச வாகனத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவு வரையிலான இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும். இதுதான் ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு கவசத்தின் முக்கிய அம்சமாகும். தங்கள் நாட்டை இலக்கு வைத்து தாக்க வரும் ஏவுகணைகளை ரேடார் மூலம் கண்டுபிடிக்கும் அயர்ன் டோம் இரண்டு இடைமறிப்பு ஏவுகணைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் செலுத்தி எதிரியின் ஏவுகணைகளை அழிக்கிறது.
தங்களை நோக்கி வரும் ஏவுகணைகளில் எது தாக்கக் கூடியது, எது இலக்கை அடையாமல் கடந்து செல்லக் கூடியது எனவும் பிரித்தறிந்து கொள்ளும் திறனை இந்த அயர்ன் டோம் கொண்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளைத் தாக்க வரும் ஏவுகனைகளை மட்டுமே துல்லியமாக இடைமறித்து அயர்ன்டோம் அழிக்கிறது. இதனால் தேவையற்று இடைமறிப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்படுவதால் பொருள்செலவும் மிச்சமாகிறது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியதையடுத்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் எண்ணெய் உற்பத்தி,சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு கிடங்குகளைக் குறிவைத்து ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தியது.
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது சுமார் 560 பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளையும், 2,250-க்கும் மேற்பட்ட ட்ரோன்ங்களையும் ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது. 10க்கும் மேற்பட்டோர் பலியான இந்தத் தாக்குதலில் சுமார் 2250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
முன்னதாக போர் தொடங்கியதுமே ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டதன் பேரில் அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புப் படை பிரிவை அந்நாட்டுக்கு இஸ்ரேல் அனுப்பி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகவே தங்கள் நாட்டின் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது.
ஈரானின் கண்மூடித் தனமாக தாக்குதல்களில் இருந்து தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேல் வழங்கிய உதவியை ஐக்கிய அரபு அமீரகம் ஒரு போதும் மறக்காது என்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு உண்மையான உதவியை வழங்க முன்வந்த நாடுகளில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளதாக கூறியுள்ள அந்நாட்டின் தேசியப் பாதுகாப்புக் குழுவின் முன்னாள் அதிகாரியான தாரெக் அல்-ஒதைபா, ((Tareq al-Otaiba)) இதன் மூலம் விரிவான இராணுவ உதவி, உளவுத் தகவல்களைப் பகிர்தல் மற்றும் இராஜதந்திர ஆதரவு என இருதரப்பு உறவின் முக்கியத்துவம் நிரூபிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே 2020-ல் ஆபிரகாம் உடன்படிக்கையில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ள நிலையில் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் ஆழமடைவதற்கான அறிகுறியாகும்.
முன்னதாக மேற்கு ஆசியாவை மறுவடிவமைப்பதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பை இந்தப் போர் வழங்குவதால் ஈரானுக்கு எதிரான தனது போரை பாதியிலேயே நிறுத்த வேண்டாம் என்றும், தாக்குதல்களைத் தீவிரப்படுத்துமாறும் சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவை வலியுறுத்தியிருந்தார்.
மேலும் , பாலஸ்தீனியர்களுடன் இரு-அரசுத் தீர்வுக்கு உடன்படாத வரை இஸ்ரேலுடன் இயல்பான உறவுக்கு வாய்ப்பில்லை என்றும் சவூதி அரேபியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தான் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு உதவிய இஸ்ரேல் சவூதி அரேபியாவுக்கு அயர்ன் டோமை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
















