மேகதாது அணை தீர்மானத்தை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கில், சட்டமன்ற செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேகதாது அணை தொடர்பாக கடந்த மாதம் 19-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று திருத்தப்பட்டது.
இதனை எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சிறப்பு தீர்மானம் தொடர்பாக ஜூன் 18ம் தேதி எம்எல்ஏக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மான நகலில் இடம்பெறாத திருத்தத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திருத்தம் ஏக மனதாக நிறைவேற்றப்படாமல், ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு,
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், சட்டமன்ற செயலாளர் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.
















