மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொதுத் தேர்வில், முறைகேட்டில் ஈடுபடுவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா மீது 2-ஆவது நாளாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், போலீசார் தடியடி நடத்த மத்திய அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக குற்றம்சாட்டினார். அப்போது அவை நடவடிக்கையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்காத நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குறுக்கிட்டு ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் முன்வைக்கக் கூடாது என கேட்டுக்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு வாயிலாக தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதையடுத்து அவை நடவடிக்கையை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
















