சிந்து நதியில் தண்ணீர் விநியோகம் தடைபட்டதால் பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது. இதற்கு தீர்வு காணுமாறு பாகிஸ்தான் அழைப்பு விடுத்த நிலையில், இனி ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்ததால், பாகிஸ்தான் நிலைகுலைந்து போய்விட்டது… இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்…
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக சிந்து நதியில் பாகிஸ்தானுக்கான நீர் பங்கீட்டை மத்திய அரசு நிறுத்திவைத்ததால், அந்நாட்டின் விவசாயம் தடைபட்டு பொருளாதார மந்த நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தச் சூழலில் கார்கில் போர் வெற்றி தின விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானில் நடைபெறும் நிகழ்வுகளை மேற்கொள்காட்டி, இனி அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றால், அது ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையப்படுத்தியே இருக்கும் என தெளிவாக கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர், இந்தியாவின் ஒன்றுபட்ட காஷ்மீரின் ஒருபகுதி என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்…
((பைட்- ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்- 30 Seconds))
பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் துணைபோகும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு.
இந்தச் சூழலில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு பேசியதால், கதிகலங்கிப் போன பாகிஸ்தான், தங்களுக்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளது.
மேலும், ராஜ்நாத் சிங்கின் பேச்சு ஜம்மு-காஷ்மீர் தொடர்பான உண்மையை சித்தரித்து, பிராந்திய அமைதியை சீர்குலைப்பதாகவும் பாகிஸ்தான் கதற தொடங்கியிருக்கிறது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், அவரது உரை உண்மையை தவறாக சித்தரித்து, பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து, சிந்துநதி பிரச்னைக்குத் தீர்வுகாண உதவ வேண்டுமென பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கெனவே ஐ.நா.வில் இந்தப் பிரச்னையை பாகிஸ்தான் பலமுறை முன்வைத்த போதிலும், அதற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
கடந்த 1960-ஆம் ஆண்டில் கையொப்பமான சிந்து நதி ஒப்பந்தம் தற்போது காலாவதியாகிவிட்டதாக மத்திய அரசு தெளிவாக தெரிவித்துவிட்டது. இதனால், சிந்து நதியில் அணைகட்டும் திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டங்கள் மூலம் கூடுதல் நீரைச் சேமித்து ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சிந்து நதியில் தண்ணீர் என்பது பாகிஸ்தானுக்கு கானல் நீராகிவிடும். பயங்கரவாதத்தை ஊக்குவித்து அதை அரசின் கொள்கையாகவே மாற்றிய பாகிஸ்தான், இந்தியாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்கால் ஆட்டம் கண்டு போய் நிற்கிறது…
















