தமிழ்த்திரையுலகில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு அடுத்தபடியாக நடிகர் தனுஷும் அரசியலுக்குள் நுழைகிறாரா என்ற விமர்சனம் எழத்தொடங்கியுள்ளது. அரசியலுக்கு அச்சாரமிடும் வகையில் தனுஷ் கலந்து கொண்ட நிகழ்வுகளும், அதில் அவர் ஆற்றிய உரையும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
ராயன் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு படங்களுக்காக நடிகர் தனுஷுக்கு கிடைத்த தேசிய விருது தொடர்பாக விமர்சனம் எழுந்த நிலையில் அண்மையில் நடிகர் தனுஷ் பிறந்தநாளையொட்டி திருவள்ளூரில் நடைபெற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் அவர் ஆற்றிய உரை நெருப்பாய் பற்றி எறியத் தொடங்கியிருக்கிறது. இத்துணை ஆண்டுகளாக தனது பிறந்தநாள் நிகழ்வை சத்தமின்றி நடத்திக் கொண்டிருந்த தனுஷ், தற்போது மிகப்பிரம்மாண்டமாக நடத்தியிருப்பதன் பின்னணியில் அரசியல் ஆர்வம் இருக்கிறதோ என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.
தமிழகத்தை அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து கொண்டிருந்த அதிமுக, திமுக எனும் இருபெரும் கட்சிகளை, கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் வீழ்த்திய விஜய், முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். நடிகராக இருந்த ஒருவர் திடீரென அரசியல் கட்சி தொடங்குவதும், தேர்தலில் வெற்றிபெறுவதும் அசாத்தியமான திறமை என்பதோடு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கும் அதனை சாத்தியப்படுத்தியுள்ளது. விஜயை தொடர்ந்து தனுஷும் அரசியலுக்குள் நுழைய விரும்புவதையே அவருடைய சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுவதாக கூறப்படுகிறது.
ரசிகர் மன்றம், நற்பணி இயக்கம், மக்கள் இயக்கம் என படிப்படியாக தன்னாலும், தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளாலும் இயன்ற உதவியை மக்களுக்கு செய்துவந்த விஜய், தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை சரியாக பயன்படுத்தி வெற்றியடைந்துள்ளார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஏழை, எளிய குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் என விஜய் கையில் எடுத்த அதே வழியை தான் தனுஷும் தற்போது கையில் எடுத்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே தனுஷ் நற்பணி மன்றத்தின் மூலம் இயன்ற உதவிகளை செய்துவந்த தனுஷ், இம்முறை மிகப்பிரம்மாண்டமான முறையில் சென்னை திருவள்ளூர் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கி நடத்தி முடித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் இருந்து அவரது ரசிகர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு பலமான உபசரிப்பை வழங்கிய தனுஷ், மேடையில் தனது வழக்கத்திற்கு மாறான அரசியல் தொணி ரீதியிலான பேச்சின் மூலம் கொம்பும் சீவி விட்டிருக்கிறார்.
இதன் மூலம் தனுஷ் அரசியல் வருகை உறுதியாகிவிட்டதாக அவரது ரசிகர்களும் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர்.
தனுஷ் பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ்கார்டனில் அவரது இல்லம் முன்பாக ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இல்லத்திலிருந்து வெளியே வந்த தனுஷுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, ஆள் உயர மாலையையும் அணிவித்து கவுரவப்படுத்தினர்.
அங்கு கூடியிருந்த ரசிகர்களில் பலர் தனுஷ் தனது நடிப்படையே தொடர வேண்டும் எனவும், சிலர் அரசியலுக்கு வரவேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். தனுஷின் முடிவு எதுவாக இருந்தாலும் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க தயார் எனவும் அறிவித்துள்ளனர்.
திரைத்துறையில் இருந்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை தவிர வேறு யாரும் தமிழக அரசியலில் கோலோச்ச முடியாத நிலையில் விஜய் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் கட்சி தொடங்கிய விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கூட ஆட்சி அதிகாரத்தை எட்ட முடியாமல் வீழ்ந்துவிட்டனர்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து இறுதி நேரத்தில் பின்வாங்கினார். லாரன்ஸ், விஷால் என அடுத்தடுத்து திரையுலகிலிருந்து அரசியலை நோக்கி தங்களுடைய பயணத்தை திருப்பிக் கொண்டிருக்கின்றனர். ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சித் தொடங்குவதற்கும், அரசியல் செய்வதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு என்றாலும் அவர்களுக்கான வெற்றி, தோல்வியை முடிவு செய்யும் அதிகாரம் மக்களிடமே மட்டுமே உண்டு என்பது உண்மை.
















