கடந்த 13 நாட்களாக ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் மீதான புதிய தாக்குதல்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிறுத்தியுள்ளார். திடீரென ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிறுத்தி வைக்க என்ன காரணம்? யாருடைய ஆலோசனையின் பேரில் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்தார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி 28 ம் தேதி ஈரான் போர் தொடங்கியதிலிருந்து பலமுறை ஈரானின் கடற்படை, இராணுவத் தளங்கள் உள்ளிட்ட அனைத்தும் தரைமட்டமாக்கப் பட்டுவிட்டன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவந்தார்.
அமெரிக்காவுடனான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஈரான் அடுத்த சில நாட்களிலேயே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தியது.
இனிப் பேசிப் பயனில்லை என்று கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தவும் ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிடவும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து 13-நாட்கள் இரவில் ஈரான் மீது குண்டுமழை பொழிந்த அமெரிக்கப் படைகள் மேலும் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
14வது இரவுக்கான தாக்குதல் திட்டத்தை முன்வைத்திருந்த பென்டகன் தயார் நிலையில் இருந்த போதும், தனது நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக்கொண்டு ஈரான் மீதான தாக்குதல்களை ட்ரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
இரண்டு வாரங்களில் முதன்முறையாக, ஈரானின் தெற்குக் கடற்கரை மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் உள்ள ஈரானின் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்த வேண்டாம் என்றும், வான்வழித் தாக்குதல்களை நிறுத்தி வைக்குமாறும் ராணுவத்துக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். 24 மணிநேரத்துக்குள் ட்ரம்ப் தனது முடிவை மாற்றியதற்கு அமெரிக்காவின் உயர்மட்ட ராணுவத் தளபதியான அட்மிரல் பிராட் கூப்பர்காரணம் என்று கூறப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக கூறிய அட்மிரல் கூப்பர், தாக்குதல்களை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க அதிபரிடம் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஈரான் மீதான போரை மேலும் தீவிரப்படுத்தினால் அமெரிக்க மத்திய கட்டளைக்கு ஒதுக்கப்பட்ட ஏவுகணைகள் முற்றிலும் தீர்ந்துவிடும் என்றும், இது அமெரிக்க ராணுவத் தளங்களையும் நட்பு நாடுகளையும் குறிவைக்கும் ஈரானின் எதிர்த்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க முடியாமல் போய் விடும் என்றும் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் டான் கெயின் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் ‘பேட்ரியாட்’ ரக ஏவுகணை எதிர்ப்பு யூனிட்களின் கையிருப்பு மிகக் குறைந்த நிலைக்கு சென்றுள்ளது. கடந்த சில மாதங்களில் அமெரிக்கா 1,200-க்கும் மேற்பட்ட பேட்ரியாட் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு பேட்ரியாட் ஏவுகணையின் மதிப்பும் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தற்காலிக தாக்குதல் நிறுத்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ள ஐநாசபையின் அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ், அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பது தொடர்பாக ஓமன் நாட்டுப் பிரதிநிதிகள் குழு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான எந்தவொரு ஒப்பந்தமும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு ஏற்புடையதாக இருக்குமா ? என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத நிலையில் மீண்டும் போர் தீவிரமடையக்கூடும் என்று கூறப்படுகிறது.
















