கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்தியா – சீனா இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் நடைபெறுகிறது. இந்த யாத்திரை, இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட்டில் நிறைவடைகிறது.
யாத்திரை மேற்கொள்ள விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இப்பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் பாஸ்போர்ட் வைத்திருத்தல் அவசியம் என்றும், யாத்திரைக்கு விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசிநாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் யூ ஜிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு வருவோரை அன்புடன் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த யாத்திரை, இருமாபெரும் நாகரிகங்களுக்கு இடையிலான நம்பிக்கை, நட்பு மற்றும் மக்கள் பிணைப்புகளுக்கான ஒரு பாலமாக அமையட்டும் என தெரிவித்துள்ளார்.
















