காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை குவித்து இந்தியா பதக்கப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் சாக்ஷி, ப்ரீத்தி பவார், ஜாஸ்மின், பிரியா, அருந்ததி சவுத்ரி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
இவர்களுடன் சச்சின் சிவாச், அங்குஷ் பங்கல் ஆகியோரும் தங்கம் வென்றனர். ஜடுமணி சிங், லவ்லினா போர்கோஹெய்ன் வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினர். ஆண்கள் 80 கிலோ எடைப்பிரிவில் அங்குஷ் பங்கல் இங்கிலாந்து வீரரை வீழ்த்தி தங்கம் வென்ற நிலையில், 90 கிலோ பிரிவில் நரேந்தர் பெர்வால் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
இதன்மூலம் இந்திய குத்துச்சண்டை அணி 7 தங்கம், 3 வெள்ளியுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், தடகளத்தில் குல்வீர் சிங் வெண்கலம் வென்ற நிலையில், இந்தியா மொத்தம் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என 39 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதற்கிடையே, காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபுவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்களுக்கான மும்முறை தாண்டுதலில் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர்.
இதனை பாராட்டிய முதலமைச்சர் விஜய், பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
















