கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி, இளைஞர்களிடம் பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிடப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையின் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ஆம் ஆண்டு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் ஜமேஷா முபீன் என்ற தற்கொலைப்படை பயங்கரவாதி உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், வழக்கில் தொடர்புடையவர்கள் 2021 ஆகஸ்ட் முதல் 2022 ஜூன் வரை, போலியாக கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத சான்றிதழ்களை விற்பனை செய்ததன் மூலம் ஈட்டப்பட்ட பெருந்தொகையை வெடிபொருட்கள் வாங்கவும், கோவை அரபு கல்லூரி செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இளைஞர்களிடம் பயங்கரவாத கருத்துக்களைப் புகுத்தும் நோக்கத்துடன், அரபு மொழி கல்வி என்ற போர்வையில் இணையவழி மற்றும் நேரடி வகுப்புகள் நடத்த நிதி உபயோகப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சதித் திட்டத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
















