கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணைக்கு தற்போது வினாடிக்கு சுமார் 19 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உபரிநீர் திறப்பு படிப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரிநீர், நாளைக்குள் தமிழக எல்லையான ஒகேனக்கல்லை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நாளை மனுத்தாக்கல் செய்கிறது. தங்களுக்கு உரிய நீரை வழங்க உத்தரவிட கோரியும், மேகதாது திட்டத்திற்கு எதிராகவும் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.
















