மேற்குவங்கத்தின் சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், சீனா மற்றும் வங்கதேச நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி பகுதி, நாட்டின் மிக முக்கியமான பகுதியை இணைக்கும் பகுதியாக உள்ளது. சிலிகுரியில் உள்ள 22 கிலோ மீட்டர் நீள வழித்தடம், வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நமது அண்டை நாடான வங்கதேசம் சிலிகுரி அருகே 2ஆம் உலகப் போரின்போது கைவிட்ட விமான தளத்தை சீரமைத்தது.
வங்கதேசத்தின் நடவடிக்கை நமது பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட நிலையில், நம் ராணுவம் சிலிகுரியை சுற்றி மூன்று புதிய ராணுவ தளங்களை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.
புதிய ராணுவ தளங்கள் மேற்குவங்கத்தின் சோப்ரா, பீஹாரின் கிஷன்கஞ்ச், அசாமின் துப்ரி ஆகிய இடங்களில் அமைகின்றன. புதிய ராணுவ தளங்கள் போருக்கான உத்திகளை வகுக்கும் கட்டுப்பாட்டு மையங்களாக செயல்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வங்கதேசத்தின் இடைக்கால அரசு, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் இருந்து போர் விமானங்கள், ட்ரோன்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிலிகுரியை சுற்றி மூன்று ராணுவ தளங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















