பகிரங்க மிரட்டல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை ஆயுதமாகக் கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாம் பதவிக்கால வெளிநாட்டு கொள்கை, உலக அரசியலில் பதற்றத்தை அதிகரித்து, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளிடையே கூட கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உலக அரசியலில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவரது இரண்டாம் பதவிக்காலத்தில் எடுக்கப்பட்டு வரும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள், அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளிகளையே அச்சமடையச் செய்துள்ளன.
ஒருபுறம் கிரீன்லாந்து முதல் காசா வரையிலும், மற்றொருபுறம் ஐரோப்பாவிலிருந்து நேட்டோ நாடுகள் வரையிலும், அதிபர் டிரம்பின் அணுகுமுறைகள் தூதரக சமநிலையில் இருந்து விலகி, அழுத்தம் மற்றும் மிரட்டல்களை மையமாகக் கொண்டதாக மாறிவிட்டது என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
கிரீன்லாந்து விவகாரமே இந்த பரபரப்பின் மையமாக உள்ளது. அந்த ஆர்டிக் தீவைக் அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சர்வதேச பாதுகாப்புக்கு அவசியம் எனவும், இது பேச்சுவார்த்தைக்குரிய விஷயம் அல்ல என்றும் டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார்.
ஆனால், அரசியல் நிபுணர்களோ, இதனை பொருளாதார வரி மிரட்டல்களாகவும், பொதுவெளி அழுத்தங்கள் மற்றும் சமூக ஊடக நாடகங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் கட்டாய அரசியல் நடவடிக்கையாகவும் பார்க்கின்றனர்.
இதே வேளையில், காசாவுக்காக முன்வைக்கப்பட்டுள்ள புதிய “BOARD OF PEACE” திட்டம், ஐரோப்பாவை நோக்கிய டிரம்பின் கடுமையான வர்த்தக நிலைப்பாடுகள் ஆகியவை நேட்டோ கூட்டணியின் ஒற்றுமையையே சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது.
அண்மையில் வெனிசுலாவில் நடந்த அமெரிக்க ஆதரவு கொண்ட தலையீட்டுக்குப் பின், டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து மீது டிரம்ப் நேரடியாக உரிமை கோரியதும் சர்ச்சையை தீவிரப்படுத்தியுள்ளது.
அதேபோல, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் டிரம்புக்கு ஏற்பட்ட முரண்பாடுகளும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கிரீன்லாந்து குறித்த அமெரிக்காவின் நோக்கங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என மேக்ரான் அனுப்பிய தனிப்பட்ட செய்தியை, டிரம்ப் பொதுவெளியில் பகிர்ந்ததைத் தொடர்ந்து இருநாட்டு உறவில் சிக்கல் அதிகமானது.
இதனை மனதில் வைத்து காசா அமைதிக் குழுவில் சேர மறுத்த பிரான்சுக்கு, 200 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்ததும் பிற அண்டை நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக, AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், அமெரிக்க வரைபடங்களில் கனடா மற்றும் கிரீன்லாந்தை இணைத்துக்காட்டும் காட்சிகள் போன்றவை, டிரம்பின் அரசியலில் குறியீடுகள் மற்றும் மிரட்டல்கள் முக்கிய ஆயுதங்களாக மாறியுள்ளதை காட்டுகின்றன.
இதன் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியமும் 93 பில்லியன் யூரோ மதிப்பிலான எதிர்தடுப்பு நடவடிக்கைகளை பரிசீலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரிட்டனில் அமெரிக்காவுடனான ‘சிறப்பு உறவு’ முறிவின் விளிம்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
இத்தகைய சூழலில், அதிபர் டிரம்பின் வெளிநாட்டு கொள்கை அமெரிக்காவின் உலகப் புகழையும், அதன் தூதரக முகத்தையும் மாற்றி, பல நாடுகளை பொருளாதார மற்றும் அரசியல் மோதல்களுக்கு தயாராக நிறுத்தியுள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















