மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில், மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார். இதில், 2026-2027 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-2026 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.8 சதவீதமாக குறைந்ததால் தனியார் நிறுவனங்களுக்குக் கடன் கிடைப்பது எளிதாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 2026 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.4 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் எனவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வரும் 1ஆம் தேதி காலை 11 மணி வரை மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மக்களவையில் 2026-2027ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் முடிந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மாநிலங்களவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
















