எஃப் 35 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினால், கனடாவின் வான்வெளிகளை தங்களது போர் விமானங்களை கொண்டு நிரப்புவோம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் கனடா தனது பழைய CF-18 போர் விமானங்களுக்கு மாற்றாக, 88 லாக்ஹீட் மார்ட்டின் F-35A லைட்னிங் II போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
விநியோகங்களில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, ஒப்பந்த தொகை 19 பில்லியனில் இருந்து சுமார் 28 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இதனால் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டதால், அமெரிக்காவிடம் இருந்து குறைவான எண்ணிக்கையில் எஃப் 35 போர் விமானங்களை வாங்க கனடா ஆலோசித்து வருகிறது.
அத்துடன் எஃப் 35 போர் விமானங்களுக்கு மாற்றாக, ஸ்வீடனைச் சேர்ந்த சாப் நிறுவனத்தின் கிரிபென் ஈ (Gripen E) போர் விமானங்களை வாங்குவது குறித்தும் கனடா அரசு பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் எஃப் 35 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினால், கனடாவின் வான்வெளிகளை தங்களது போர் விமானங்களை கொண்டு நிரப்புவோம் என கனடாவுக்கான அமெரிக்க தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















