தைப்பூசத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு பாஜக பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மயில் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அடிவாரத்தில் இருந்து மயில் காவடி எடுத்து திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு படி வழியாக காவடி எடுத்தபடி மலைக்கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபட்டார்.
இதற்கிடையே அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில், பழநி முருகன் கோயிலுக்கு சென்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதில், தைப்பூசத் திருநாளில், அப்பன் முருகப் பெருமானை பழனி மலையில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா! எனவும் பதிவிட்டிருக்கிறார்.
















